Saturday, July 25, 2009

வேட்டைக்காரன் - வெளிவராத முழுக்கதை



பரபரப்பான சென்னை ஏர்போர்டில் தன்னுடன் பயணம் செய்ய இருக்கும் அண்ணனுக்காக காத்திருக்கிறாள் தங்கை. கடைசி அழைப்பு வந்தும் அண்ணன் வராததால் ஏமாற்றத்துடன் உள்ளே செல்கிறாள் அதன் பின் தாமதமாக வரும் அண்ணனை உள்ளே விட மறுக்கிறார்கள் அதிகாரிகள். அங்கிருந்து டாட்டா சுமோவில் அந்த சென்னை டிராபிக்கிலும் தாமஸ் மௌன்டை நோக்கி பறக்கிறார் அண்ணன். விமானம் மெதுவாக புறப்படுகிறது .அண்ணன் தாமஸ் மௌன்டின் உச்சிக்கு ஓடுகிறார்.உச்சியில் இருந்து பறக்கும் விமானத்தின் சக்கரத்தை தாவி பிடிக்கிறார் அவர்தான் நம்ம ஹீரோ விஜய்.

சக்கரத்தில் தொங்கும் விஜயை பார்த்து பைலட் விஜய் மெதுவாக கதவை திறக்கிறார் தன் காலில் கட்டியிருக்கும் கர்ச்சிப்பால் விஜய் உள்ளே செல்கிறார்.பைலட் விஜய் நீ எந்த பிளைட் என்று கேட்கிறார் அப்போது


நீ எந்த பிளைட் நான் எந்த பிளைட்

டிக்கெட் தேவை இல்லை

இதுதானே வைலட்டு நான் தானே ஹை லைட்

ஹெட் லைட்டே தேவை இல்லை

என்ற பாடலுடன் அறிமுகம் ஆகிறார். அந்த விமானத்தின் பணிப்பெண்ணான கதாநாயகி அனுஸ்காவை பார்க்கும் விஜய்க்கு காதல் வருகிறது.விமானத்தில் மது,சாப்பாடு பரிமாறப்படுகிறது அப்போது விஜய்க்கு மட்டும் மதுவுக்கு பதில் தண்ணீர் தரப்படுகிறது. கோபம் அடைந்த விஜய் தண்ணி காட்ட நான் தோட்டகாரன் இல்லை நான் வேட்டைகாரன் என்கிறார்.அதன் பின் தொடர்ந்து குடித்து கொண்டிருக்கிறார் மதுவை. ஐந்து ரௌண்டுக்குபின் மது தர மறுக்கும் அனுஸ்காவிடம் நான் தொட மாட்டேன் தொட்டா விட மாட்டேன் என்று பன்ச் டயலாக் பேசுகிறார்.

திடீரென்று பைலட் விஜய்க்கு ஹார்ட் அட்டாக் வர அனுஸ்கா ஓடி வந்து இங்கு யார் டாக்டர் என்று கேட்கிறார்.உடனே விஜய் எழுந்து யார் வெள்ளை கோட் போட்டு கழுத்துல ஸ்டதஸ்கோப் போட்டு இருக்கிறாங்களோ அவர் தான் டாக்டர் என்கிறார்.உடனே அனுஸ்கா நீங்களும் டாக்டர்தானே என்கிறார்,ம்ம் இன்னுமா இந்த ஊர் உலகம் நம்மள நம்பிட்டு இருக்கு என்று தனக்கு தானே கூறிவிட்டு பைலட் விஜய்க்கு சிகிச்சை அளிக்கிறார்.பைலட்டால் விமானம் ஓட்ட முடியாததால் பயணிகள் பதட்டம் அடைகிறார்கள்.உடனே ஹீரோ விஜய் விமானத்தை ஓட்டி பத்திரமாக ஆஸ்திரேலியாவில் தரை இறக்குகிறார்,டாக்டர் நீங்கே விமானம் ஓட்டுவிங்களா என்று அனுஸ்கா கேட்க எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டமா என்கிறார், அனுஸ்கா காதல் கொள்கிறாள்.

அதன் பின் ஆஸ்திரேலியாவில் தன் தங்கை படிக்கும் யுனிவர்சிட்டி விடுதிக்கு அருகில் உள்ள பப்பில் குடித்துவிட்டு சிலர் ரகளை பண்ணுகிறார்கள் இதனால் தன் தங்கை அமைதியாக படிக்க முடியாமல் போகிறது,இதை கண்டு கோபம் அடைந்த விஜய் பப்பு உரிமையாளரிடம் பப்பை மூடி விடுமாறு பேசிகொண்டிருக்கிறார்,அதற்கு உரிமையாளர் இங்கு குளிர் அதிகம் அதனால் உடம்பை சூடேற்ற குடிக்கிறோம் என்று திமிராக பேசுகிறார்,உடனே விஜய் உடம்பை சூடேற்ற குடிக்கிற உனக்கே இவ்வளவு திமிருனா, தேர்தல், பிறந்தநாள், கல்யாணம், கட்சேரி,புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், புதுப்பட ரிலீஸ்,காதல்,வேலை கிடைச்சா,வேலை போனா,பரிச்சைல பாசனா,பரிச்சைல பெயிலான, குடிக்கிற எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று பேசி கொண்டிருக்கும் போது அங்கு சிலர் சத்தம் போடுகின்றனர்.
உடனே விஜய் சைலென்ஸ் பேசிகிட்டு இருக்கேன்லே என்று கத்துகிறார்,இங்கு அனல் பறக்கும் சண்டைகளுக்கு பிறகு பப்புமூடப்படுகிறது, இதனால் பாதிப்படைந்த விஸ்கி, ரம், பிராந்தி,வோட்கா போன்ற சரக்கு தயாரிப்பாளர்கள் விஜய்க்கு எதிராக சதி செய்கிறார்கள்,இவர்களை விஜய் வேட்டை ஆடினாரா ? காதலியை கைபிடித்தாரா? தங்கையின் படிப்பு என்ன ஆனது என்பது தான் அனல் பறக்கும் சூடான கிளைமாக்ஸ்.


எப்பூடி நாங்களும் கதை எழுதுவோம்ல!!!!!!!!